Friday, January 4, 2019

திருப்புகழ்த் தலங்கள் (ஒரு யாத்திரைக் குறிப்பேடு):

15ஆம் நூற்றாண்டில் அவதரித்த அருணகிரிப் பெருமான் பாடியருளிய 16,000 திருப்புகழ்த் திருப்பாடல்களுள் நமக்கின்று கிடைத்திருப்பவை சுமார் 1331 திருப்பாடல்களே. இப்பனுவல்களைத் தம்முடைய பகீரத பிரயத்தனத்தினால் முதன்முதலில் சேகரித்துப் பதிப்பித்த புண்ணிய சீலர் திரு.வீ.டீ.சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் (காலம்:1846 - 1909). பின் அவற்றிற்கான முதல் உரையினை எழுதி, அத்தலங்களின் அமைவிடக் குறிப்புகளை முதல் முயற்சியாக ஆய்ந்தறிந்து வெளியிட்டவர் அவரது திருப்புதல்வரான 'தணிகைமணி திரு.செங்கல்வராயப் பிள்ளை அவர்கள்'.

          (தணிகைமணி திரு.வி.எஸ். செங்கல்வராயப் பிள்ளை அவர்கள்)
மேற்குறித்துள்ள ஆய்வுகளை முதற்குறிப்பாகக் கொண்டு, திருப்புகழ் தலங்களுக்கான ஆய்வினைத் தொடர்ந்து மேற்கொண்டு தம்முடைய அரிய பெரிய பிரயத்தனத்தினால், கண்டறியப் படாதிருந்த எண்ணிறந்த திருப்புகழ் தலங்களை ஆய்ந்தறிந்து வெளிக்கொணர்ந்த பெருமை திரு.வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்களையும் அவர்தம் தமையனார் திரு.ராமசேஷன் அவர்களையுமே சாரும். இப்பெருமக்கள் எழுதி வெளியிட்டுள்ள 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' எனும் நூலே 'திருப்புகழ் தலங்களுக்கான பிரமாண நூலாக' விளங்குகின்றது, இந்நூலுக்கு திருமுருக.வாரியார் சுவாமிகளும், திரு. கி.வா. ஜகந்நாதன் அவர்களும் அணிந்துரை எழுதி ஆசி கூறியுள்ளனர்.

திரு.வலையப்பேட்டை ரா கிருஷ்ணன் அவர்கள் 
தற்பொழுதுள்ள இணைய தளங்களில் எண்ணிறந்த குறைபாடுகள் காணப் பெறுகின்றன. திருப்புகழ் தலங்கள் அல்லாதவற்றைத் திருப்புகழ் தலங்களாகக் குறிப்பது, மாவட்டங்களைத் தவறாகக் குறிப்பது, தலப் பெயர்களை மட்டுமே குறித்து அத்தலத்திலுள்ள திருப்புகழ் திருக்கோயில் எதுவென்று தெரிவிக்காமல் விடுப்பது, செவிவழிச் செய்திகளை வைத்துத் தாமாகவே ஒரு தலத்தினைத் திருப்புகழ் தலமாக முன்மொழிவது, அமைவிடத்தைத் தெளிவு பட விளக்காமல் பிற தகவல்களுக்காக ஏராளமான வரிகளை விரயம் செய்வது, எளிதாக பயன்படுத்தும் வகையில் தொகுக்காதது என்று இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

பல வருடங்களாக அடியேனுக்கு, திருப்புகழ் தலங்களைத் தேவாரத் தலங்களைப் போன்றே 'தொண்டை நாடு; சோழ நாடு - காவிரி தென்கரை மற்றும் வடகரை; நடு நாடு; பாண்டிய நாடு; கொங்கு நாடு; ஈழ நாடு; துளுவ நாடு; மலை நாடு; ஈழ நாடு' எனும் பிரிவுகளாக்கிப் பின் அவைகளை மாவட்ட வாரியாகவும் தொகுத்து, யாத்திரை மேற்கொள்வோர் எளிமையாகப் பயன்படுத்தும் வகையிலும், திருக்கோயில்களைத் துல்லியமான முறையில் சென்றடைவதற்கும், குறிப்பேடு போன்றதொரு வலைத்தளம் அமைக்க வேண்டும்' என்ற பெருவிருப்பம் இருந்து வந்தது.

பலமாத ஆய்வு மற்றும் தொகுத்தெழுதும் பணிக்குப் பின்னர் தற்பொழுது இம்முயற்சி முழு வடிவத்தினைப் பெற்றிருப்பதாக உணர்கின்றேன். 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' எனும் பிரமாண நூலை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கியுள்ள இவ்வலைத் தளத்தில் நேரடியாக பாடல் பெற்ற திருப்புகழ் தலங்கள் மட்டுமே தொகுக்கப் பட்டுள்ளது (வைப்புத் தலங்கள் இவற்றுள் சேராது). 

ஒவ்வொரு தலத்திற்கான பக்கத்திலும் அத்தலத்திற்கான 'கூகுள் மேப்ஸின் நேரடி வழிகாட்டி' மற்றும் பாராயணம் புரிவதற்கு எளிதான வகையில்; சந்த ஓசை மாறாத வண்ணம் அத்தலத்தின் திருப்புகழ் திருப்பாடல்களையும் பிரித்துத் தொகுத்துள்ளேன். 

இத்தளத்தில் 206 திருப்புகழ் தலங்கள் இடம்பெறுகின்றன, அவற்றுள் 105 தலங்கள் 'தேவாரப் பாடல் பெற்றுள்ளவையாகவும் விளங்குகின்றன (சிவ சிவ).

Monday, December 31, 2018

தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்:

(தேவாரத் தலம்)  மற்றும் (திருவாசகத் தலம்எனும் அடைப்புக் குறியுடன் காணப்படும் தலங்கள் 'திருப்புகழ் பாடல் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாது தேவாரம் மற்றும் திருவாசகத் தலங்களாகவும்' திகழ்வதைக் குறிக்கின்றது.

சென்னை மாவட்டம்:

திருவலிதாயம் (தேவாரத் தலம்)
திருமயிலை (மயிலாப்பூர்) (தேவாரத் தலம்)
திருவான்மியூர் (தேவாரத் தலம்)
திருவொற்றியூர் (தேவாரத் தலம்)
கோசை நகர் (கோயம்பேடு)

திருவள்ளூர் மாவட்டம்:
திருவாலங்காடு (தேவாரத் தலம்)
திருவேற்காடு (தேவாரத் தலம்)
(வட) திருமுல்லைவாயில்  (தேவாரத் தலம்)
திருத்தணிகை 
வெள்ளிகரம்
நெடிய மலை 
ஆண்டார்குப்பம் (தச்சூர்)
சிறுவை (சிறுவாபுரி)
பாக்கம்
பாகை (பாகசாலை)

காஞ்சிபுரம் மாவட்டம்:
காஞ்சிபுரம்
திருக்கழுக்குன்றம் (தேவாரம் மற்றும் திருவாசகத் தலம்)
திருப்போரூர்
மாடம்பாக்கம்
உத்தரமேரூர்
மதுராந்தகம்
வட சிற்றம்பலம்
சேயூர் (செய்யூர், வளவாபுரி)
விசுவை
கோடை நகர் (வல்லக் கோட்டை)
பேறை நகர் (பெரும்பேறு கண்டிகை)
வயிரவிவனம்
இளையனார் வேலூர்

திருவண்ணாமலை மாவட்டம்:
திருவோத்தூர் (திருவத்திபுரம்) (தேவாரத் தலம்)

வேலூர் மாவட்டம்:
திருவலம் (தேவாரத் தலம்)
விரிஞ்சிபுரம்
கரபுரம் (திருப்பாற்கடல்)
வள்ளி மலை
வேப்பூர்
ஞானமலை
ஒடுக்கத்துச் செறிவாய் (ஒடுக்கத்தூர்)
குறட்டி
முள்வாய்

விழுப்புரம் மாவட்டம்:
திருவக்கரை (தேவாரத் தலம்)
மயிலம்

சித்தூர் மாவட்டம் (ஆந்திர மாநிலம்)
திருக்காளத்தி (ஸ்ரீகாளஹஸ்தி) (தேவாரத் தலம்)

திருக்காளத்தி (ஸ்ரீகாளஹஸ்தி):

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: சித்தூர் மாவட்டம் (ஆந்திர மாநிலம்)

திருக்கோயில்: அருள்மிகு ஞானப் பூங்கோதை அம்மை சமேத ஸ்ரீகாளத்தீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத் தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்), நக்கீரர் (கயிலை பாதி காளத்தி பாதி - 11ஆம் திருமுறை)


தலக் குறிப்புகள்:

தேவார மூவராலும் பாடல் பெற்றுள்ள பரம புண்ணியத் தலம், மணிவாசகப் பெருமானும் திருவாசகத்தில் இத்தலத்தினைப் போற்றியுள்ளார், நக்கீரர் 'கயிலை பாதி காளத்தி பாதி' எனும் தொகுப்பினை 11ஆம் திருமுறையில் அருளியுள்ளார், மேலும் நக்கீரர் மற்றும் கல்லாட தேவ நாயனார் இருவருமே தனித்தனியாய் 11ஆம் திருமுறையில் 'திருக்கண்ணப்ப தேவர் திருமறம்' எனும் தொகுப்பினை அருளியுள்ளனர். அருணகிரிப் பெருமானின் திருப்புகழ் திருப்பாடல்களையும் பெற்றுள்ள சீர்மை பொருந்திய தலம்.
*
மலையடிவாரத்தில் பிரதானத் திருக்கோயிலையும், மலையுச்சியில் கண்ணப்ப நாயனார் சிவபரம்பொருளுக்குத் தன் திருக்கண்களைப் பெயர்த்துப் பொருத்திய ஆச்சரியமான சிறிய திருக்கோயிலையும் இத்தலத்தில் தரிசித்து மகிழலாம். ஆலமுண்டருளும் ஆதிமூர்த்தி இப்பதியில் 'ஸ்ரீகாளத்தீஸ்வரர்; காளத்தியப்பர்' எனும் திருநாமங்களுடனும், உமையன்னை 'ஞானப் பிரசூனாம்பிகை; ஞானப் பூங்கோதை' எனும் திருநாமங்களுடனும் பிரத்யட்சமாய் எழுந்தருளி இருக்கின்றனர். கருவறைக்குள் சுவாமிக்கு வலதுபுறம் கண்ணப்ப நாயனார் சுமார் 4 முதல் 5 அடி உயரத் திருமேனியில் கூப்பிய திருக்கரங்களுடன் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றார்.

பெரும்பாலும் கருவறைக்கு வெளியிலிருந்தே சுவாமியைத் தரிசிக்க அனுமதிக்கின்றனர், எனினும் மூலமூர்த்திக்கு வலதுபுறமுள்ள கண்ணப்பரின் அதிஅற்புதத் திருக்கோல தரிசனம் கருவறைக்குள் சென்றால் மட்டுமே கிட்டும், ஆதலின் எவ்விதமெனும் அர்ச்சகரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுத் திருச்சன்னிதியுள் புகுந்துக் கண்ணப்ப நாயனாரைத் தரிசித்தல் வேண்டும், அபிஷேகம் அல்லது சிறப்பு அர்ச்சனைக்குப் பதிவு செய்து கொண்டால் உட்செல்லும் வாய்ப்பு இயல்பாகவே அமையக்கூடும். ஞானசம்பந்த மூர்த்தி இத்தலத்திற்கு எழுந்தருளி வந்த சமயத்தில், காளத்தியப்பரின் தரிசனப் பயனாய் வலது புறம் எழுந்தருளி இருந்த கண்ணப்பரின் திவ்ய தரிசனம் சம்பந்தமூர்த்திக்குக் கிட்டியது என்று சேக்கிழார் ஆச்சரியமாய் பதிவு செய்தருளியுள்ளார் (கும்பிட்ட பயன் காண்பார்போல் மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்).

நமது திருப்புகழ் தெய்வம் இத்தலத்தில் ஆறுதிருமுகங்களுடன், வள்ளி; தெய்வயானை தேவியர் உடன் எழுந்தருளி இருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், நெடிதுயர்ந்த திருமேனியுடன் ஸ்ரீசெங்கல்வராய சுவாமி எனும் அற்புத திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றான், அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கு மூன்று திருப்புகழ் திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளார்.

(Google Maps: Srikalahasti Temple, Srikalahasti, Andhra Pradesh 517644, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனத்தா தத்தத் தனனா தந்தத்
     தனத்தா தத்தத் தனனா தந்தத்
          தனத்தா தத்தத் தனனா தந்தத் ...... தனதான

சரக்கேறித்தப் பதிவாழ் தொந்தப்
     பரிக்காயத்தில் பரிவோடைந்துச்
          சதிக்காரர்ப் புக்குலை மேவிந்தச் ...... செயல் மேவிச்

சலித்தே மெத்தச் சமுசாரம் பொன் 
     சுகித்தே சுற்றத்தவரோடின்பத்
          தழைத்தே மெச்சத் தயவோடிந்தக் ...... குடிபேணிக்

குரக்கோணத்தில் கழுநாய் உண்பக்
     குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்
          குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் ...... படுவேனைக்

குறித்தே முத்திக்கு மறாஇன்பத்
     தடத்தே பற்றிச் சகமாயம் பொய்க்
          குலக்கால் வற்றச் சிவஞானம் பொற் ...... கழல்தாராய்

புரக்காடற்றுப் பொடியாய் மங்கக்
     கழைச் சாபத்தைச் சடலான் உங்கப்
          புகைத்தீ பற்றப் புகலோர் அன்புற்றருள்வோனே

புடைத்தே எட்டுத் திசையோர் அஞ்சத்
     தனிக்கோலத்துப் புகுசூர் மங்கப்
          புகழ்ப்போர் சத்திக்கிரையாநந்தத்தருள்வோனே

திருக்கானத்தில் பரிவோடந்தக்
     குறக் கோலத்துச் செயலாள் அஞ்சத்
          திகழ்ச்சீர் அத்திக்கழல்வா என்பப் ...... புணர்வோனே

சிவப்பேறுக்குக் கடையேன் வந்துள் 
     புகச்சீர் வைத்துக் கொளு ஞானம் பொற்
          திருக்காளத்திப் பதிவாழ் கந்தப் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனத்தா தத்தத் ...... தனதான
     தனத்தா தத்தத் ...... தனதான

சிரத்தானத்தில் பணியாதே
     செகத்தோர் பற்றைக் ...... குறியாதே

வருத்தா மற்றொப்பிலதான
     மலர்த்தாள் வைத்தெத்தனை ஆள்வாய்

நிருத்தா கர்த்தத்துவ நேசா 
     நினைத்தார் சித்தத்துறைவோனே

திருத்தாள் முத்தர்க்கருள்வோனே
     திருக்காளத்திப் பெருமாளே.

திருப்பாடல் 3:
தந்தன தானத் தனந்த தானன
     தந்தன தானத் தனந்த தானன
          தந்தன தானத் தனந்த தானன தனதான

பங்கயனார் பெற்றிடும் சராசரம் 
     அண்டமதாய் உற்றிருந்த பார் மிசை
          பஞ்சவர் கூடித் திரண்டதோர் நர உருவாயே

பந்தமதாகப் பிணிந்த ஆசையில்
     இங்கிதமாகத் திரிந்து மாதர்கள்
          பண்பொழி சூதைக் கடந்திடாதுழல் படிறாயே

சங்கடனாகித் தளர்ந்து நோய்வினை
     வந்துடல் மூடக் கலங்கிடா மதி
          தந்தடியேனைப் புரந்திடா உனதருளாலே

சங்கரர் வாமத்திருந்த நூபுர
     சுந்தரிஆதித் தரும் சுதா பத
          தண்டையனே குக்குடம் பதாகையின் முருகோனே

திங்கள் உலாவப் பணிந்த வேணியர்
     பொங்கரவாடப் புனைந்த மார்பினர்
          திண்சிலை சூலத்தழுந்து பாணியர் நெடிதாழ்வார்

சிந்துவிலே உற்றெழுந்த !காளவி
     டம் கள மீதில் சிறந்த சோதியர்
          திண்புய மீதில் தவழ்ந்து வீறிய குருநாதா

சிங்கமதாகத் திரிந்த மால்!கெரு
     வம் பொடியாகப் பறந்து சீறிய
          சிம்புளதாகச் சிறந்தகா என வருகோ முன்

செங்கதிரோனைக் கடிந்த தீவினை
     துஞ்சிடவே நற்தவம் செய்தேறிய
          தென்கயிலாயத்தமர்ந்து வாழ்வருள் பெருமாளே.


(2019 டிசம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

Sunday, December 30, 2018

திருவக்கரை:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: விழுப்புரம் மாவட்டம் 

திருக்கோயில்: அருள்மிகு வடிவாம்பிகை சமேத சந்திர மௌலீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத் தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்,  திருஞான சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்:

விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனத்திலிருந்தும் விழுப்புரத்திலிருந்தும் 31 கி.மீ தூரத்திலும், சென்னையிலிருந்து 156 கி.மீ பயணத் தொலைவிலும் அமைந்துள்ளது திருவக்கரை. ஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்றுள்ள திருத்தலம், மிகவும் விசாலமான திருக்கோயில் வளாகம், இங்கு எழுந்தருளியுள்ள வக்கிரகாளி தேவி மிகவும் பிரசித்தம். நெடுந்தூரம் பயணித்து, திருநந்திதேவரை வணங்கியவாறு உட்சென்று திருக்கருவறையை அடைகின்றோம். சிவலிங்கத் திருமேனியின் அனைத்து திசைகளிலும் திருமுகமொன்று பொருந்தியிருக்க, சந்திரமௌலீஸ்வரப் பரம்பொருள் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றார். காண்பதற்கரிய திருக்காட்சி. 

உட்பிரகாரத்தை வலம் வருகையில், கருவறையின் பின்புறம், வலது புறத்தில் திருப்புகழ் தெய்வமான கந்தக் கடவுள் ஆறு திருமுகங்களும்; பன்னிரு திருக்கரங்களில் ஆயுதங்களுடன், வள்ளி தெய்வயானை தேவியர் உடனிருக்க அதி கம்பீரனாய் எழுந்தருளி இருக்கின்றான். அற்புதத் திருக்கோலம். வெளிப்பிரகாரத்தை வலம் வருகையில் வரதராஜப் பெருமாள் தனிச்சன்னிதியில் பேரழகுத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார். சந்திரமௌலீஸ்வரப் பெருமானின் இடபாகத்தில் கோயில் கொண்டருளும் உமையன்னை வடிவாம்பிகை எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றாள். 

அருணகிரிப் பெருமான் இத்தலத்துறை மூர்த்திக்கு இரு திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், தரிசித்துப் பயன்பெற வேண்டிய அற்புதத் திருத்தலம், 


(Google Maps: chandramouleeswarar Vadivambigai Thiruvakkarai Temple, Thiruvakkarai, Tamil Nadu, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதன தத்தன தனதன தத்தன
     தனதன தத்தன ...... தனதானா

கலகலெனச் சில கலைகள் !பிதற்றுவ
     தொழிவதுனைச் சிறிதுரையாதே

கருவழி தத்திய மடுவதனில் புகு
     கடு நரகுக்கிடை ...... இடைவீழா

உலகுதனிற்பல பிறவி தரித்தற
     உழல்வது விட்டினி ...... அடிநாயேன்

உனதடிமைத் திரள் அதனினும்உட்பட
     உபய மலர்ப்பதம் ...... அருள்வாயே

குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
     நிசிசரனைப் பொரு ...... மயில்வீரா

குணதர வித்தக குமர புனத்திடை
     குறமகளைப் புணர் ...... மணிமார்பா

அலை புனலில் தவழ் வளைநில வைத்தரு
     மணி திருவக்கரை ...... உறைவோனே

அடியவர் இச்சையில் எவையெவை உற்றன
     அவை தருவித்தருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தத்தன தத்தன தத்தன தத்தன
     தத்தன தத்தன தத்தன தத்தன
          தத்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான

பச்சிலையிட்டு முகத்தை மினுக்கிகள்
     குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள்
          பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட ...... நினைவோர்கள்

பத்திநிரைத் தவளத் தரளத்தினை
     ஒத்த நகைப்பில் விழிப்பில் மயக்கிகள்
          பஷ மிகுத்திட முக்கனி சர்க்கரை ...... இதழூறல்

எச்சில் அளிப்பவர் கச்சணி மெத்தையில்
     இச்சக மெத்த உரைத்து நயத்தொடு
          மெத்திஅழைத்து அணைத்து மயக்கிடு ...... மடமாதர்

இச்சையில் இப்படி நித்த மனத்துயர்
     பெற்றுலகத்தவர் சிச்சியெனத் திரி
          இத்தொழில் இக்குணம் விட்டிட நற்பதம் ...... அருள்வாயே

நச்சரவில் துயில் பச்சைமுகில்!கரு
     ணைக்கடல் பத்ம மலர்த் திருவைப்புணர்
          நத்து தரித்த கரத்தர் திருத்துள ...... அணி மார்பர்

நட்ட நடுக் கடலில் பெரு வெற்பினை
     நட்டரவப் பணி சுற்றி மதித்துள
          நத்தமுதத்தை எழுப்பி அளித்தவர் ...... மருகோனே

கொச்சை மொழிச்சி கறுத்த விழிச்சி!சி
     றுத்த இடைச்சி பெருத்த தனத்தி!கு
          றத்தி தனக்கு மனப்ரியம் உற்றிடு ...... குமரேசா

கொத்தவிழ் பத்ம மலர்ப் பழனத்தொடு
     குற்றமறக் கடிகைப் புனல் சுற்றிய
          கொட்புள நல்திருவக்கரை உற்றுறை ...... பெருமாளே 


(2021 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)